Wednesday, October 14, 2009

இந்த வயதான குழந்தைக்கு...


என் வயதொத்த ஒருவன்
உன்னை 'பாட்டி' என்றழைக்கயில்
பகீரென்றதெனக்கு...

அவசரமாய் ஆராய்ந்தேன்.
தலையில் கால்வாசி நரைகள்
தோல்களில் சுருக்கங்களின் ஆரம்பம்,
கன்னக்குழி கொஞ்சம் பெரிதாய்
சில மாதங்களுக்கு முன்
விழுந்த முத்துக்களால்...
உணரவில்லை அப்போதும்..

உன் சமையலில் சத்திருந்தபோதும்
நினைவு மறதியால்
ருசி குறைந்திருந்தது...
உணரவில்லை அப்போதும்..

நடுநிசியிலும் நிமிடத்தில்
பசியாற்றிடுவாய்...இன்று
தன்னை மறந்து துயில்கையில்
உணரவில்லை அப்போதும்..

மருந்துசீட்டுகளும்
மாத்திரைபட்டைகளும்
மாடத்தை நிறைத்தும்...
உணரவில்லை அப்போதும்..

கட்டியென கத்தரித்த
கருப்பையை மருத்துவர்
காட்டுகையில் சிலிர்த்ததெனக்கு.
எத்தனை பாதுகாப்பாய் வளர்த்திருக்கிறாய்.
உணரவில்லை அப்போதும்..

மறுமுறை
அவன் 'பாட்டி'என்றழைக்கயில்
மிக ஆழமாய் உணர்த்தபட்டேன்....
என்றும் எங்களை
குழந்தையாய் நீ பார்ப்பதால்
உன் முதுமை
உணராமல் விட்டேனோ..??

முதுமையே நீ,
முடிந்தவரை முயன்றாலும்
துளியளவும் தடையிடயிலாது உன்னால்...
அவள் அன்பின் மழைக்கு.

முதுமை பயம் வேண்டாமுனக்கு...
உன்,
தேகத்தளர்வுகளை அன்புகொண்டு இறுக்கி
முனகவைக்கும் நினைவுகளுக்கு செவிகொடுத்து
இனிக்கும் நினைவுகள் பலகேட்டு
'அம்மாச்சி''அப்பாச்சி' எனும் குரல்கள் ஒலிக்க
அனுபவங்களுக்கும் அறிவுரைகளுக்கும் அடிக்கடி அணுகி
தனிமை தவிர்த்து
காலனுக்கு சவால்விட்டு
உன்..
முதுமையை இனிமையாக்குவோம்.

இறைவா,
மறுபிறவியில் மனமில்லை
இப்பிறவியிலேயே
நீட்டித்துவிடு....
தாயாகும் வாய்ப்பை.
இந்த வயதான குழந்தைக்கு..


சீனிவாசன் ஆளவந்தார்

Tuesday, June 02, 2009

ஆலமரம் இல்லா விழுதுகள்

அப்பா ...

நாட்களில்

நமத்து விடாமல்....

காலங்களில்

கணத்துகொன்டிருக்கிறது,

உன் நினைவுகள்.


பிஞ்சு பருவத்தில்

தந்தையிழந்த நீ..

தளராமல்

தாயோடு பகிர்ந்து கொண்டாய்

குடும்பச்சுமையை.


வரப்பு புற்களும்

கறவை மாடும்

உன் படிப்பை வளர்த்தன.

தூக்குவாளி கூழ்

உன் தேகம் வளர்த்தது.


பட்டபடிப்பு ஆசையும்

பறக்கவிட்டாய் ‍.. சகோதரன்

படிப்புக்காய்.

இன்றும்

பத்திரமாய் வைத்திருக்கிறேன்..

பத்தாம் வ‌குப்பில் நீ எடுத்த

100/100 மதிப்பெண் சான்றிதழை.


தாமடைந்த‌

துயர‌ங்கள்

தம் பிள்ளைகளுக்கு கூடாதென‌

பொறுப்போடும்

முனைப்போடும்

உயரம் எட்டினாய் நீ...

குடிசை வாழ்க்கையை

பாசத்தாலும்

உழைப்பாலும்

நிறைத்து நிறைத்து கல்வீடாக்கினாய்.


மொட்டை மாடி

நிலா இரசித்து

நீ சொன்ன நெடுங்கதைகள்

நெஞ்சைவிட்டு நீங்கமறுக்கிறது.

ஏழு அதியசங்களில் கால்பதித்தாலும்...

நீ கூட்டிபோன‌

நம் குலசாமி சுற்றுலாக்கு நிகராகாது.

சீஸ் பர்கரும், பீசா'வும்...

நீ வாங்கிவந்த

பட்டாணி, வறுகடலைக்கு நிகராகாது.


முனியப்பராய்

மிரட்டும் நீ....

கண்களில் குளம்கட்டி நிற்பாய்..

என் சிறு காய்ச்சலில்.


எதிர்பாராத தருண‌த்தில்

மரணக்கயிறு

மாரடைப்பாய் வீசப்பட,

கண்களில்

எங்கள் எதிர்காலம் உறைந்திருக்க

நொடிப்பொழுது

செய்வதறியமால் நீ செயலிழந்துவிட‌

இரக்கமில்லாத இறைவன்

கண்முன்னே கொன்றுவிட்டான்

எங்கள் சந்தோஷத்தை.



மௌனமாய்

விழுது

அழுது கொண்டிருக்கிறது...

ஊன்றயுதவிய ஆலமரத்தை

தாங்கிட தருணம் தரப்பட‌வில்லை என...


சீனிவாசன் ஆளவந்தார்